செய்திகள்
தொழிலாளி கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது
தொழிலாளி கொலையில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜன் நொரா (வயது 29) என்பவர், ஓசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவில் ராஜன் நொரா, தன்னுடைய நண்பர்களான கிஷன், அஜய் தாந்தி ஆகியோருடன் மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது கடனாக கொடுத்த பணம் தொடர்பாக அஜய் தாந்திக்கும், ராஜன் நொராவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ராஜன் நொரா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜன் நொரா கொலை தொடர்பாக அவருடைய நண்பர்கள் அஜய் தாந்தி, கிஷன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.