ஆன்மிகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2020-09-05 07:47 GMT   |   Update On 2020-09-05 07:47 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 17-ந் தேதி வரை 12 நாட்கள் விழா நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆன்லைனில் முன்பதிவு மூலமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதிகாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை இலவச மற்றும் ரூ.100 கட்டணத்தில் தினசரி 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா நாளை அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 17-ந் தேதி வரை 12 நாட்கள் விழா நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் உள்பிரகாரத்தில் வைத்து நடைபெறும். சுவாமி வீதி உலா நடைபெறாது. விழாவில் பங்கேற்க பக்தர்கள் மற்றும் உபயதாரர்களுக்கு அனுமதி இல்லை.

இதேபோல் திருவிழாவின் முக்கிய நாட்களான 7-ம் திருவிழா (12-ந்தேதி), 8-ம் திருவிழா (13-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற நாட்களில் திருவிழா நிகழ்வுகள் நீங்கலான இடைப்பட்ட நேரங்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மேலும் 10-ம் திருநாள் தேரோட்டம் நடைபெறாது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான முதல் நாள் கொடியேற்றம், 5-ம் திருநாள் குடவரைவாயில் தீபாராதனை, 7 மற்றும் 8-ம் திருவிழா சுவாமி சண்முகர் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் பக்தர்கள் வசதிக்காக வலைதளத்தில் (யூடியூப்) நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று கோவில் செயல் அலுவலர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News