செய்திகள்
கோப்புப்படம்

திருமங்கலம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை

Published On 2021-02-22 00:02 GMT   |   Update On 2021-02-22 00:02 GMT
திருமங்கலம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து 50 பவுன் நகை கொள்ளைடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சித்தாலை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 42). இவர் தமிழ்நாடு திறந்தவெளி சேமிப்பு கிட்டங்கியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

சுந்தர்ராஜ் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் ஜெயலட்சுமி வெளியே சென்று விட்டார். சிறிதுநேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் எல்லாம் கீழே சிதறி கிடந்தன. பீரோ உள்ளே வைத்திருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி, கணவர் சுந்தர்ராஜிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து திருமங்கலம் தாலுகா போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி நின்றது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோதினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. வீடு திறக்கப்பட்டு கிடந்ததால் சாவி இருக்கும் இடம் தெரிந்த நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்களா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News