உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளியை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் கைது
கண்ணமங்கலத்தில் மாற்றுத்திறனாளியை தாக்கும் வீடியோ வாட்ஸ்-அப்பில் பரவல் காரணமாக அ.தி.மு.க. பிரமுகர் கைது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் பங்களா தெருவை சேர்ந்தவர் கோபி (வயது50). மாற்றுத்திறனாளி. இவருக்கும் அதே தெருவில் வசிக்கும் சந்தவாசல் ஊராட்சி முன்னாள் தலைவர், அதிமுக கிளை செயலாளர் ராஜாமணிக்கும் (68), நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் ராஜாமணி அவரது மகன் பழனி (40) உறவினர் கிருஷ்ணன் மனைவி சாந்தி (50) ஆகிய 3 பேரும் சேர்ந்து கோபியை தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடந்தபோது அங்கிருந்தவர்கள் எடுத்த வீடியோ பதிவு வாட்ஸ் அப்பில் வேகமாக பரவியது.இந்த சம்பவம் தொடர்பாக சந்தவாசல் போலீசில் மாற்றுத்திறனாளி கோபி புகார் செய்தார்.
அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், மகேந்திரன் ஆகியோர், மாற்றுத்திறனாளிமீது தாக்குதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, ராஜாமணியைக் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது போலீஸ் நிலையத்தில் வெளிப்புற காம்பவுண்டு சுவர் அருகே போன் பேசுவதாக சென்ற ராஜாமணி, காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்து, போலீஸ் குடியிருப்பு வழியாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
அதிர்ச்சியடைந்த சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். சினிமா பாணியில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் பழனி, சாந்தி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.