செய்திகள்
தற்கொலை

பெரம்பலூரில் டீக்கடை உரிமையாளர் தற்கொலை

Published On 2021-10-13 07:31 GMT   |   Update On 2021-10-13 07:31 GMT
பெரம்பலூரில் டீக்கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அருகே உள்ள மரவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 55). இவர், பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து திருச்சி - சென்னை புறவழிச்சாலை செல்லும் பிரதான சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி ராணியை பிரிந்து சுமார் 15 ஆண்டுகளாக தனியாக செல்வராஜ் வாழ்ந்து வந்தார்.

இவருக்கு கார்த்தி, கண்ணதாசன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மூத்த மகனுக்கு திருமணம் செய்வது தொடர்பாக உறவினரிடையே ஏற்பட்ட சிறு பிரச்சினை காரணமாக செல்வராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

நேற்று காலை செல்வராஜ் கடைக்கு டீக்குடிக்க வந்தவர்கள் கடையின் கதவு பாதி திறந்தும், மீதி திறக்காமலும் இருந்ததை கண்டனர். இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், அங்கு வந்து கடைக்குள் பார்த்தபோது செல்வராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தற்கொலை செய்ததாக தெரியவந்தது. பின்னர் செல்வராஜின் உடலை கைப்பற்றி, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசாா் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது தந்தை அண்ணாமலை கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News