செய்திகள்
கோப்பு படம்

ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. உதவியாளருக்கு 2 ஆண்டு ஜெயில்

Published On 2019-11-01 16:19 GMT   |   Update On 2019-11-01 16:19 GMT
ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. உதவியாளருக்கு 2 ஆண்டு ஜெயில்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து திருவாரூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா கீழவிடையல் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு கீழவிடையல் கிராமத்தில் 18 செண்ட் நிலம் உள்ளது.

இந்த நிலத்துக்கான பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்கு திருவாரூர் ஆர்.டி.ஓ. விடம் மனு கொடுத்துள்ளார்.

இந்த பட்டா மாற்றம் தொடர்பாக உத்தரவு வாங்கி தருகிறேன் என்று கூறி அப்போது ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் பணிபுரிந்த ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் பாலகிருஷ்ணன் என்பவர் ரூ.2 ஆயிரம் லஞ்சமாக பாலசுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார்.

இது குறித்து பாலசுப்பிரமணியன் நாகை லஞ்ச ஒழிப்பு போலீசில் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 24-ந் தேதி புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி பாலசுப்பிரமணியன் ரூ.2 ஆயிரத்தை பாலகிருஷ்ணனிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் பாலகிருஷ்ணன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு ஜெயில்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமார் தீர்ப்பு கூறினார்.
Tags:    

Similar News