செய்திகள்
தேமுதிக- அமமுக இணைந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கும்- விஜயபிரபாகரன் பேச்சு
துரோகத்தால் வெளியேற்றப்பட்ட தே.மு.தி.க.-அ.ம.மு.க. இணைந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் திருப்பூரில் கூறினார்.
திருப்பூர்:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் செல்வக்குமாருக்கு முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்து திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் விஜயபிரபாகரன் பேசியதாவது:-
திருப்பூர் விஜயகாந்தின் கோட்டையாகும். விஜயகாந்த் ஏதாவது மக்களுக்கு துரோகம், தவறு செய்துள்ளாரா? இந்த கட்சி எதுவும் துரோகம் செய்ததா? எந்தவித ஊழலும், துரோகமும் செய்யாத ஒரே கட்சி தே.மு.தி.க., நாங்கள் என்ன தவறு செய்தோம்?. மக்கள் ஏன் இன்னும் எங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை. கூட்டணி வைத்தது தப்பா?. மக்கள் சரியான அங்கீகாரம் கொடுக்காததால் தான் கூட்டணி அமைத்தோம். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு.
தே.மு.தி.க. கட்சியும், எங்கள் குடும்பமும் காசுக்கு ஆசைப்பட்டது இல்லை. நாங்கள் பிழைக்க வரவில்லை. மக்களுக்காக உழைக்க வந்துள்ளோம். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி, மாறி அவர்களின் ஊழலை பற்றி பேசுகிறார்கள். யாராவது மக்களை பற்றி பேசுகிறார்களா?.
பல்வேறு இலவசங்களை அறிவிக்கிறார்கள். ஆனால் கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்பட்டு கேட்கும்போது இலவசம் கொடுக்கவில்லை. இப்போது ஏன் இலவசம் கொடுக்கிறார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். கொரோனா பரவியபோது வீட்டிலேயே இருங்கள் என்று சொன்னவர்கள், இப்போது கொரோனா வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் பிரசாரத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. கூட்டத்தை கூட்டுகிறார்கள். இப்போது கொரோனா வராதா?. ரூ.1,000, ரூ.1,500 கொடுப்பது எல்லாம் கண் துடைப்பு நாடகம். அவர்கள் மக்களை காப்பாற்ற மாட்டார்கள்.
வாசிங்மெஷின் இலவசம் என்கிறார்கள். பின்னலாடை தொழில் நிறுவனங்கள் மூடிகிடக்கிறது. துணியே உற்பத்தி செய்யவில்லை. நொய்யல் ஆற்றில் தண்ணீர் இல்லை. அதிக துணி இருப்பவர்கள் வாசிங்மெஷினை பயன்படுத்துவார்கள். போடுவதற்கு துணியே இல்லை. எதற்கு வாசிங்மெஷின். இன்றைக்கு ஒரு இலவசம் வந்தால் அதன்பின்னால் நூறு ஊழல் நடக்கும் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
முரசுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க மறுக்கிறீர்கள். வேட்பாளரை பார்த்து மக்கள் கேள்விக்கு கேட்கும் நிலை உள்ளபோது, மக்களை பார்த்து தே.மு.தி.க. கேள்வி கேட்கிறது. அந்த அளவுக்கு தே.மு.தி.க. சுத்தமான கட்சியாக உள்ளது. மக்கள் சுயமாக நிற்க வேண்டும். தன்மானத்துடன் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டும். அனைத்து துறையிலும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போது அரசியலிலும் இளைஞருக்கு முன்னுரிமை கொடுங்கள்.
எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள். தவறு செய்தால் சட்டையை பிடித்து கேள்வி கேட்கலாம். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு ஊழல் கட்சிகளை அகற்றி மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க டி.டி.வி. தினகரனும், விஜயகாந்த்தும் கூட்டணி அமைத்துள்ளனர். அ.ம.மு.க. துரோகத்தால் வெளியேற்றப்பட்ட கட்சி. தே.மு.தி.க.வும் துரோகத்தால் வெளியேற்றப்பட்ட கட்சி. இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கும். .
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் தே.மு.தி.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், வடக்கு மாவட்ட செயலாளர் குமாரசாமி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.