செய்திகள்
கொள்ளை (கோப்புப்படம்)

துடியலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Published On 2019-11-07 11:49 GMT   |   Update On 2019-11-07 11:49 GMT
கோவை துடியலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா கோவில் உள்ளது.

இந்த கோவிலில் நேற்று இரவு பூஜையை முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டி சென்றார். இந்த நிலையில் இன்று காலை அந்த கோவிலின் நிர்வாகி ராமசாமி என்பவர் அந்த வழியாக நடந்து வந்தார்.

அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கோவிலின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை காணவில்லை.

நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் சிலர் உண்டியலை திருடி சென்றது தெரியவந்தது. கோவில் உண்டியல் திருடப்பட்ட செய்தி அந்த பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து கோவில் முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

இதுகுறித்து தடாகம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பன்னிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டில் கோவில் உண்டியல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் பங்கு போட்டு பிரித்து விட்டு உண்டியலை சுடுகாட்டில் வீசி சென்றுள்ளனர்.

கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வருவதால் அதிகளவில் பணம் வசூலாகி வந்துள்ளது. எனவே திருடப்பட்ட உண்டியலில் லட்சக்கணக்கில் பணம் இருந்திருக்கலாம் என கோவில் நிர்வாகி தெரிவித்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இந்த பகுதிகளில் ஏராளமான கோவில்கள் உள்ளன. எனவே இந்த பகுதியில் தடாகம் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அப்போது தான் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தடுக்கப்படும் என்றனர். தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News