செய்திகள்
ராமதாஸ்

7 பேர் விடுதலை விவகாரம்- கவர்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ராமதாஸ் வேண்டுகோள்

Published On 2019-10-18 09:36 GMT   |   Update On 2019-10-18 09:36 GMT
ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை மீது கவர்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய முடியாது என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து விட்டதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஆளுநரின் நிலைப்பாடு அரசியல் சட்டத்துக்கு எதிரானதாகும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவின்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக ஆளுநருக்கு உண்டு என்றும், இந்த வி‌ஷயத்தில் அமைச்சரவை பரிந்துரையின்படி ஆளுநர் முடி வெடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி ஆணையிட்டது.

அதனடிப்படையில் செப்டம்பர் 9-ந்தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய தமிழக அமைச்சரவை, 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதன்பின் சில முறை அரசின் சார்பில் ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில், அமைச்சரவையின் பரிந்துரை ஆய்வில் இருப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்க முடியாது என்று முதலமைச்சரிடம் ஆளுநர் கூறிவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆளுநரும், முதல்- அமைச்சரும் தான் மக்களுக்கு விளக்க வேண்டும்.

7 தமிழர்கள் விடுதலை குறித்த அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பதற்கும், திருப்பி அனுப்பவும் ஆளுநருக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஆனால், 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று முதலமைச்சரிடம் ஆளுநர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்து விட்டார் என்றால், தமது அந்த முடிவை அதிகாரப்பூர்வமான முறையில் தமிழக அரசுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அது அரசியல் சட்டப்படியான அவரது கடமையாகும்.



மாறாக, ஒருபுறம் முதலமைச்சரிடம் தமது முடிவை தெரிவித்து விட்டு, மறுபுறம் தமிழக அரசின் சார்பில் அனுப்பப்பட்ட நினைவூட்டல் கடிதங்களுக்கு, ‘‘அமைச்சரவையின் பரிந்துரை ஆய்வில் உள்ளது’’ என ஆளுநர் மாளிகையிலிருந்து பதில் அனுப்புவது முறையல்ல. ஒரே வி‌ஷயத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு நிலைப்பாட்டையும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் இன்னொரு நிலைப்பாட்டையும் ஆளுநர் மேற்கொள்வது அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய முடியாது என்ற தமது முடிவை ஆளுநர் எழுத்து மூலம் தமிழக அரசுக்கு தெரிவிக்கும் பட்சத்தில், தமிழக அமைச்சரவை மீண்டும் கூடி ஏழு தமிழர்களை விடுவிக்க பரிந்துரைக்கும் தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முடியும். அவ்வாறு அனுப்பினால் அதை ஏற்று 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆணையிடுவதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லாத நிலை ஏற்படும்.

அப்படி ஒரு நிலை ஏற்படுவதை தவிர்க்கவே ஆளுநர் இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தெரிகிறது. ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் செயல்பட வேண்டுமே தவிர, சொந்த விருப்பு வெறுப்பின்படி செயல்பட முடியாது.

7 தமிழர்கள் விடுதலை குறித்த ஆளுநரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதை அதிகாரப்பூர்வமாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்க மறுத்து ஆளுநர் திருப்பி அனுப்பும் பட்சத்தில், அதே பரிந்துரையை ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News