ஆன்மிகம்
பழனி முருகன் கோவில்

பழனியில் பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடத்த முடிவு

Published On 2020-11-10 06:33 GMT   |   Update On 2020-11-10 06:33 GMT
பழனி முருகன் கோவிலில் சூரசம்ஹாரத்தை பக்தர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நேரலையாக காண பழனியில் உள்ள முக்கிய சாலைகளில் தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கந்தசஷ்டி விழா மிகவும் முக்கியமானதாகும். இந்த வருடம் வருகிற 15-ந்தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. 7 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை கண்டபிறகு திருக்கல்யாணத்துடன் விரதத்தை நிறைவுசெய்வார்கள். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்கள் திறக்கப்பட்டாலும், திருவிழாக்கள் நடத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒருசில கோவில்களில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழனியில் சூரசம்ஹாரம் நடத்த வாய்ப்பு உள்ளதா? என கோவில் இணை ஆணையர் கிராந்திகுமார்படி, பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் சூரசம்ஹாரத்தை பக்தர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கிரிவீதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, கிரிவீதி செல்லும் அனைத்து வழிதடங்களும் மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூரசம்ஹாரத்தின் போது கோவில் அலுவலர்கள், குருக்கள்கள் மற்றும் சீர்பாதம் தாங்கிகள் ஆகியோர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது.

இதனிடையே பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடத்தினால் அந்த நிகழ்ச்சியை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நேரலையாக காண பழனியில் உள்ள முக்கிய சாலைகளில் தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News