ஏரல் அருகே பெண்ணை கற்பழித்து கொன்ற 2 பேர் கைது - பரபரப்பு வாக்குமூலம்
ஏரல்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்களத்தை அடுத்த சம்படி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி செங்கமலம் (வயது 47).
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்து விட்டார். இதனால் செங்கமலம் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அவர் தனது மகன் கோமதி சங்கருடன் தனியாக வசித்து வந்தார்.
கடந்த 11-ந் தேதி இரவில் வழக்கம் போல் செங்கமலம் தனது வீட்டில் மகனுடன் தூங்கினார். மறுநாள் காலையில் பார்த்த போது செங்கமலத்தை காணவில்லை. அப்போது வீட்டின் பின்புறம் வழியாக வாழைத் தோட்டத்துக்கு செல்லும் வழியில் அரை நிர்வாண நிலையில் செங்கமலம் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
கொலையாளிகளை பிடிக்க ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் ஒரு தனிப்படையும், ஏரல் இன்ஸ்பெக்டர் முத்து லட்சுமி தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டது.
கொலை நடந்த இடத்தில் பதிவான தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து விசாரணையை மேற்கொண்டனர்.
சந்தேகத்தின் பேரில் சம்படி காலனியை சேர்ந்த மாயாண்டி மகன் மகராஜன் (24), சம்படியை சேர்ந்த ஆனந்த் (34) ஆகிய இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் செங்கமலத்தை கொன்றது அவர்கள் தான் என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-
நாங்கள் இருவரும் கூலி தொழிலாளிகள். தினமும் நாங்கள் ஒன்றாக மதுகுடிப்பது வழக்கம். கணவர் இறந்ததால் செங்கமலம் தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். ஒரே பகுதி என்பதால் அவருடன் பழக்கம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று இரவில் நாங்கள் இருவரும் வழக்கம் போல மது குடித்தோம். மதுபோதையில் செங்கமலம் வீட்டிற்கு சென்றோம். அங்கு தூங்கி கொண்டிருந்த அவரை கற்பழிக்க முயன்றோம்.
அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆத்திரத்திரமடைந்த நாங்கள் கல்லால் சரமாரியாக தாக்கி அவரை கற்பழித்தோம். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து உடலை இழுத்து சென்று வீட்டின் பின்புறம் உள்ள புதர் செடிகளுக்கு இடையே வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். பின்னர் எதுவும் தெரியாதது போல் எங்களது வீட்டிற்கு சென்றுவிட்டோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.