செய்திகள்
கோப்புப்படம்

வறுமையால் ஏராளமான மாணவர்கள் படிப்பை கைவிட்டு வேலைக்கு செல்வதாக அதிர்ச்சி தகவல்

Published On 2021-06-24 22:52 GMT   |   Update On 2021-06-24 22:52 GMT
அரசு பள்ளிகளை பொறுத்தவரை ஆன்லைன் வகுப்புகளில் பங்கு பெறுவதிலும் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் சந்தித்து வருகின்றனர்.
மதுரை:

மதுரையை சேர்ந்த முத்துச்செல்வம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடக்கின்றன. ஆனால் அரசு பள்ளிகளை பொறுத்தவரை ஆன்லைன் வகுப்புகளில் பங்கு பெறுவதிலும் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் சந்தித்து வருகின்றனர்.

ஏராளமான மாணவர்கள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது. அவர்கள் தங்களது படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர். எனவே இடைநின்ற மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பை முறையாக பராமரிக்க வேண்டும். ஆனால் இதுகுறித்த மத்திய, மாநில அரசுகளின் கணக்கெடுப்பில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதிகாரிகள் முறையாக கணக்கெடுத்தால் தான் உண்மை நிலை தெரியவரும்.

பள்ளியில் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பாக கிராமங்கள், ஊரகப்பகுதிகளில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உரிய முறையில் கணக்கெடுப்பை நடத்தும்படி அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் பலன் இல்லை. எங்களின் மனு அடிப்படையில் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சார்பில் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 6 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
Tags:    

Similar News