செய்திகள்
கோப்புப்படம்

1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் நவம்பர் 1-ந்தேதி முதல் திறப்பு: முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2021-09-28 17:42 GMT   |   Update On 2021-09-28 17:42 GMT
மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் தெரிவித்ததை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் அக்டோபர் 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 1-ந்தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாணவர்கள் பள்ளி செல்லாமல் பல மாதங்களாக வீட்டிலேயே இருப்பது பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள்  தெரிவித்ததை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.



வாரஇறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமுதாய அரசியல் கலாசார நிகழ்வுகள், திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். கடைகளில் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப நிலை கருவி கொண்டு பரிசோதிக்க வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க வேண்டும். சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News