ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் கோவிலில் முருகன் கோவர்த்தனா அம்பிகையிடம் சக்திவேல் பெறும் நிகழ்ச்சியின் போது எடுத்தபடம்.

தாயார் கோவர்த்தனா அம்பிகையிடம் “சக்திவேல்” பெற்ற முருகப்பெருமான்

Published On 2020-11-20 07:03 GMT   |   Update On 2020-11-20 07:03 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் இன்று மாலையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதனையொட்டி முருகப்பெருமான் தன் தாயாரான கோவர்த்தனா அம்பிகையிடம் சக்திவேல் பெற்றார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக நேற்று “வேல் வாங்குதல்“ நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி மாலை 6.30 மணியளவில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து கம்பத்தடி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட திருக்கண்ணிற்கு சத்தியகிரீஸ்வரருடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்தநிலையில் கோவர்த்தனா அம்பிகை சன்னதியில் இருந்து நவரத்திரங்களால் இழைக்கப்பட்ட சக்தியான வேலைபெற்று நந்தியை வலம் வந்தார்.

இதனையடுத்து சத்தியகீரிஸ்வரர் முன்னிலையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் கோவர்த்தனா அம்பிகையிடம் பெற்ற சக்திவேல் சமர்ப்பிக்கப்பட்டது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதனையடுத்து சுவாமிக்கு மகாதீப ஆராதனை நடைபெற்றது. அதைக்கண்டு அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து திருவாட்சி மண்டபத்தை சாமி வலம் வந்தார்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி முதல் 5 மணி வரை கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி தவிர்க்கப்பட்டுள்ளது. இதே சமயம் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அணுமதிக்கப்படுவார்கள். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நாளை 21-ந்தேதி மாலையில் பாவாடை தரிசனம் நடக்கிறது.
Tags:    

Similar News