செய்திகள்
விபத்து (கோப்புப்படம்)

சின்னசேலம் அருகே விபத்து: கணவன்-மனைவி பலி

Published On 2019-11-07 05:01 GMT   |   Update On 2019-11-07 05:01 GMT
சின்னசேலம் அருகே மொபட் மீது மினி லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சின்னசேலம்:

பெரம்பலூர் மாவட்டம் நம்பியூர் அண்ணாநகரை சேர்ந்தவர் மணிவேல்(வயது 58). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலை(55). மணிவேலுவின் உறவினர் காசாம்புஅம்மாள் சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூர் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் உடல்நிலை காரணமாக நேற்று மதியம் இறந்து விட்டார்.

இந்த தகவல் அறிந்த மணிவேல் அவரது மனைவி அஞ்சலையுடன் துக்கம் விசாரிக்க மொபட்டில் புறப்பட்டனர். இரவு 7 மணியளவில் அவர்கள் சின்னசேலம் அருகே உள்ள வாசுதேவனூர் பஸ்நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சலையை கடக்க முயன்றனர். அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி வந்த மினிலாரி ஒன்று மொபட் மீது மோதியது.

இதில் மணிவேலும், அஞ்சலையும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த மணிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்து உயிருக்கு போராடிய அஞ்சலையை 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் அஞ்சலையும் இறந்து விட்டார். இறந்து போன மணிவேல், அஞ்சலை ஆகியோரின் உடல்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News