தொழில்நுட்பம்
ஒற்றை செயலியில் மைக்ரோசாஃப்ட் சேவைகள்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆஃபீஸ் ஆப் எனும் ஒற்றை செயலியில் மூன்று முக்கிய சேவைகளை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய ஆஃபீஸ் செயலி வெளியிடப்பட்டுள்ளது. புதிய செயலி ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வொர்டு, எக்செல் மற்றும் பவர்பாயிண்ட் என மூன்று பிரபல செயலிகளை ஒற்றை தளத்தில் வழங்குகிறது.
புதிய செயலி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனி செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டிய நிலையை நீக்கி விடுகிறது. பொது பிரீவியூ வகையில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய ஆஃபீஸ் செயலி ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மூலமாகவும், ஐ.ஒ.எஸ். பயனர்கள் ஆப்பிள் டெஸ்ட் ஃபிளைட் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளலாம்.
புதிய ஆஃபீஸ் ஆப் மொபைல் சாதனங்களில் தகவல்களை உருவாக்கும் பணியை எளிமையாக்குகிறது. உதாரணத்திற்கு புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை எடிட் செய்யக்கூடிய வொர்டு ஃபைலாகவோ அல்லது டேபில்களை அச்சிடப்பட்ட பக்கத்தில் இருந்து எக்செல் ஆக மாற்ற முடியும்.
புதிய செயலியுடன் க்ரோமியம் சார்ந்து இயங்கும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசர் ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும் என மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. புத்தம் புதிய மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசரில் என்டர்பிரைஸ் டேப் பக்கமும், மைக்ரோசாஃப்ட் 365 ஃபைல்களை நேரடியாக இயக்கும் வசதி கொண்டிருக்கும்.
மைக்ரோசாஃப்ட் எட்ஜ் தற்சமயம் விண்டோஸ் 10, விண்டோஸ் 8எக்ஸ், விண்டோஸ் 7, மேக் ஒ.எஸ்., ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கிறது.