செய்திகள்
அராகன் படை (கோப்புப் படம்)

மியான்மரில் கடத்தப்பட்ட இந்தியர்களில் 4 பேர் விடுதலை

Published On 2019-11-05 06:48 GMT   |   Update On 2019-11-05 06:48 GMT
மியான்மரில் அராகன் படையினரால் கடத்தப்பட்ட 5 இந்தியர்களில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
நைபிடாவ்:

மியான்மரில் ஆங் சான் சூக்யி தலைமையில் ஜனநாயக தேசிய கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக மியான்மர் நாட்டில் சின் மற்றும் ரக்கினே மாநிலங்களில் அராகன் கிளர்ச்சிப்படைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், கலடன் மல்டி-மோடல் டிரான்ஸ்போர்ட் ப்ராஜெக்ட் (கே.எம்.எம்.டி.பி) நிறுவனத்தில் பணிபுரியும் ஐந்து இந்தியர்கள் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ஐந்து பேர் பலேதவாவில் இருந்து ராகைன் மாநிலத்தில் உள்ள கியுக்தாவ் பகுதிக்கு கடந்த 3ம் தேதி சென்று கொண்டிருந்தபோது அராகன் படைகளால் கடத்தப்பட்டனர்.  மியான்மரைச் சேர்ந்த ஐந்து பேர்களில் சின் மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினர் யு ஹவாய் டினும் அடங்குவார். எம்.பி மற்றும் இந்தியர்களை கடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், கடத்தப்பட்ட 5 இந்தியர்களில் நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இந்திய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அராகன் படைகளால் கடத்தப்பட்ட 10 பேர்களில் 5 பேர் இந்தியர்கள். இந்தியர்களில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு இந்தியரான வினு கோபால் என்பவர்,  மாரடைப்பால் இறந்து விட்டார் என கூறப்படுகிறது. சின் மாநில பாராளுமன்ற உறுப்பினர் இன்னும் கிளர்ச்சிப் படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

அராகன் ராணுவம் ரக்கினே மாநிலத்திற்கான ஒரு கூட்டமைப்பு அந்தஸ்துக்காக போராடுகிறது. கே.எம்.எம்.டி.பி நிறுவனத்திற்கு எதிரானது அல்ல என்று முன்னர் கூறியிருந்தது. மேலும் இந்திய தொழிலாளர்கள் குறிவைக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும்.

வினு கோபால் மாரடைப்பால் இறந்து விட்டதாக அராகன் கிளர்ச்சிப்படைகள் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News