உள்ளூர் செய்திகள்
நெல்லை மாவட்ட கிராமங்களுக்கு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ரூ.2.47 கோடி நிதி ஒதுக்கீடு-மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பேச்சு
நெல்லை மாவட்ட கிராமங்களுக்கு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ரூ.2.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் கூறினார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் பாளை கே.டி.சி.நகரில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதன் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வ லட்சுமி அமிதாப், செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் சாலமோன் டேவிட், கனகராஜ், ரூபா, கிருஷ்ணவேனி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தொடர்நது பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
அப்போது மாவட்ட கவுன்சிலர்களிடம் தங்களது பகுதிகளுக்கு எலக்ட்ரிக் குப்பை வண்டி, அனைத்து ஜாதியினரும் பயன்படுத்தும் வகையில் சமத்துவ சுடுகாடு அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பேசியதாவது:-
மாவட்டத்தில் உள்ள 204 ஊராட்சி மன்றங்களுக்கும், தலா ஒரு எலக்ட்ரிக் குப்பை வண்டிகள் வழங்கப்படும். மாவட்டம் முழுவதும் குடிநீர் மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.2.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு மஞ்சப் பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பாக கவுன்சிலர்களின் அமர்வுபடி, பயணப்படி ஆகியவற்றை கலெக்டரிடம் வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.