செய்திகள்
கைக்கடிகாரத்தில் மறைத்து வைத்து கடத்தி வந்த தங்கத்தை படத்தில் காணலாம்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல் - ரூ.5 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது

Published On 2020-12-16 19:05 GMT   |   Update On 2020-12-16 19:05 GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கம் மற்றும் ரூ.5 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது வர்கீஸ் (வயது 25), முகமது யாசிர் கான் (23), திருச்சியை சேர்ந்த முஜிபுர் ரகுமான் (34), பிலால் (33), புதுக்கோட்டையை சேர்ந்த மதன்குமார் (24), மதுரையை சேர்ந்த சையத் முகமது (30), ராமநாதபுரத்தை சேர்ந்த அசோக்குமார் (32), பசில் ரகுமான் (27), முகமது ரபீக் (21) ஆகிய 9 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி, அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் கைக்கடிகாரம், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து, கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் இவர்கள் ஐபோன், செல்போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், உடற்பயிற்சிக்கான சத்து உணவு பொருட்களையும் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 9 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கம், ரூ.19 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள், சிகரெட்டுகள், உடற்பயிற்சிக்கான சத்து உணவு பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு சென்ற சிறப்பு விமானத்தில் செல்ல வந்த சிவகங்கையை சேர்ந்த ரசூலுதீன் (29) என்பவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் கைப்பையில் உள்ள ரகசிய அறைக்குள் இங்கிலாந்து பவுண்டு, சிங்கப்பூர் டாலர்களை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் 10 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், செல்போன்கள், உடற்பயிற்சிக்கான சத்துணவு பொருட்கள், சிகரெட்டுகள் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 10 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News