செய்திகள்
கைது

கொடைக்கானலில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயற்சி- 3 பேர் கைது

Published On 2021-10-27 17:34 GMT   |   Update On 2021-10-27 17:34 GMT
கொடைக்கானலில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் சென்னையை சேர்ந்த கவுசல்யா ஆத்ரிகா, மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோருக்கு சொந்தமான 80 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் பத்திரம் கடந்த ஆண்டு காணாமல் போனது.

இந்நிலையில் அந்த நிலத்தின் பத்திர நகல் வேண்டும் என பத்திரப்பதிவுத்துறைக்கு ஆன் லைன் மூலம் மர்மநபர் புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த இடத்தின் உரிமையாளர் தங்களுக்கு தெரியாமல் தங்களது இடத்தை மர்ம நபர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு முயற்சி செய்வதாக கூறி இந்த ஆவணம் சம்பந்தமாக பத்திரபதிவுத்துறையினருக்கு யாரேனும் தொடர்பு கொண்டால் தங்களிடம் தெரிவிக்குமாறு கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் கவுசல்யா ஆத்ரிகா, அர்ஜுன் தாஸ் ஆகியோருக்குச் சொந்தமான இடத்தினை போலியாக ஆவணம் மற்றும் இடத்தின் உரிமையாளர்கள் ஆதார் கார்டு போன்று தயாரித்து சம்மந்தபட்ட இடத்தினை விற்பனை செய்வதற்கு ஒரு கும்பல் முயன்றது.

இந்த இடத்தின் முழு விபரம் அறிந்த சார்பதிவாளர் அவர்களின் நடவடிக்கைகளை கண்டு சந்தேகமடைந்து மறைமுகமாக இந்த ஆவணத்தின் உண்மையான உரிமையாளரை தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது இடத்தை விற்பனை செய்ய முயற்சிக்கவில்லை என்றும், நாங்கள் சென்னையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்த மர்ம கும்பல் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து கொடைக்கானல் சார்பதிவாளர் ராஜேஸ் மர்மக்கும்பலின் சி.சி.டி.வி. காட்சிகளுடன் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் கொடைக்கானலை சேர்ந்த காளிமுத்து மற்றும் இடத்தின் உரிமையாளர் போன்று போலியாக ஆவணம் தயார் செய்த இருவர் உள்ளிட்ட 3 பேர் மீது ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம், பொய்யான ஆவணம் தயாரித்தல், மற்றவரின் சொத்தை அபகரிப்பது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் வேறு யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என்ற கோணத்தில் கொடைக்கானல் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் சொத்தை பதிவு செய்ய ஆவணம் தயார் செய்து கொடுத்த ஆவண எழுத்தர் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியைச் சேர்ந்த செபஸ்டி முத்து மகன் ஆல்பர்ட் (வயது50), சாட்சி கையெழுத்திட வந்த கொடைக்கானல் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த போஸ்கோ மகன் சுதாகர் (42), நாயுடுபுரம் வின்னர் மகன் அஸ்வின் (29) ஆகிய 3 பேரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News