செய்திகள்
எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம்

அ.தி.மு.க. தேர்தல் பிரசாரம் அடுத்த மாதம் தொடங்குகிறது

Published On 2020-12-16 06:25 GMT   |   Update On 2020-12-16 06:25 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரசார பணிகள் குறித்து வியூகம் அமைத்து வருகிறார்கள். அடுத்த மாதம் மத்தியில் அவர்கள் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் தேர்தல் பணிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன.

ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் அங்கமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். நலத்திட்ட உதவிகளையும் ஆங்காங்கே வழங்கி வருகிறார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தற்போது திறந்த வேனில் சென்று தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இதேபோல பல கட்சிகளும் தேர்தல் பிரசார பணிகளை தொடங்கி விட்டன.

ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும் பிரசார களத்தில் குதிக்க தயாராகி வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரசார பணிகள் குறித்து வியூகம் அமைத்து வருகிறார்கள். அடுத்த மாதம் மத்தியில் அவர்கள் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

அதாவது பொங்கல் பண்டிகையையொட்டி அ.தி.மு.க. பிரசார பணிகளை மேற்கொள்ளும் என கட்சி வட்டாரங்கள் கூறின. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் விஷேச வாகனங்களில் சென்று மக்களின் ஆதரவை திரட்டுகிறார்கள்.

இதற்காக பிரசார வாகனங்கள் மற்றும் தேவையான சாதனங்களை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.

தேர்தல் பணிகள் தொடர்பாக ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பிரசார பணிகளை எப்படி செய்ய வேண்டும். அடிமட்ட அளவில் எந்த வகையில் பிரசார யுக்திகள் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் பூத் கமிட்டி, பெண்கள் குழு, இளைஞர் பாசறை, ஐ.டி. பிரிவு ஆகியவற்றை அனைத்து பஞ்சாயத்து மட்டத்திலும் தயார்படுத்துவது பற்றியும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன.

இந்தமாத இறுதியில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் கூட்டணி குறித்தும், பிரசார திட்டங்கள் குறித்தும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. அதைத்தொடர்ந்து பிரசார பணிகள் தொடங்கப்பட இருக்கிறது.

தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியினர் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதற்கு பதில் கொடுக்கும் வகையில் எந்த மாதிரியாக பிரசாரம் அமைய வேண்டும் என்றும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அரசு செய்துள்ள திட்டங்களை முன்வைத்தும், 4 ஆண்டுகளில் செய்த சாதனைகளை எடுத்து கூறியும் பிரசாரம் செய்ய உள்ளன.

ரஜினி கட்சி தொடங்கினால் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே அதற்கு தகுந்தமாதிரி அ.தி.மு.க. வியூகங்கள் வகுக்கிறது. மேலும் கூட்டணியையும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளை தக்க வைப்பது, புதிதாக பல கட்சிகளை அ.தி.மு.க. கூட்டணிக்கு கொண்டு வருவது என்பது அவர்களுடைய முக்கிய திட்டமாக உள்ளது.

மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. அதை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அந்த பிராந்தியத்தில் செல்வாக்கு உள்ள இன்னும் பல கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News