செய்திகள்
கொலை

திருச்சியில் குழந்தைகள் கண் முன்பு மனைவி அடித்துக்கொலை

Published On 2021-01-22 06:39 GMT   |   Update On 2021-01-22 06:39 GMT
திருச்சியில் அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த கணவர், குழந்தைகள் கண் முன்பு மனைவியை அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி:

திருச்சி தில்லைநகர் செங்குளத்தான் காலனி, குளத்தெரு பகுதியை சேர்ந்தவர் தவசி (வயது 27). அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 24). இருவேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு சாய்பிரசாத் (5) என்ற மகனும், கவிநிலா (2) என்ற மகளும் உள்ளனர்.

ராஜேஸ்வரி குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதே பகுதியில் வீட்டு வேலைகளுக்கு சென்று வந்தார். தவசிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனை அவரது மனைவி தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மேலும் ராஜேஸ்வரி அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தவசி, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறும் செய்து வந்துள்ளார். அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராஜேஸ்வரியின் சகோதரி சகுந்தலா அவர்களை அவ்வப்போது சமாதானப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று தவசி தனது இருசக்கர வாகனத்தை விற்று விட்டு வீடு திரும்பினார். பின்னர் மனைவியிடம் தனது சொந்த ஊரான மன்னார்குடிக்கு சென்று விடலாம் என கூறியுள்ளார்.

இதற்கு ராஜேஸ்வரி சம்மதிக்கவில்லை. இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே ராஜேஸ்வரியின் சகுந்தலா மற்றும் அவரது குடும்பத்தினர் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர். இதையடுத்து அனைவரும் இரவு தூங்க சென்றனர்.

இன்று அதிகாலை சகுந்தலா துணி துவைப்பதற்காக எழுந்துள்ளார். அப்போது ராஜேஸ்வரி வீட்டில் இருந்து ரேடியோ பாடும் சப்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது சகோதரி ராஜேஸ்வரி ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். உடலின் அருகில் இரண்டு குழந்தைகளும் அழுது கொண்டிருந்தன.

மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த தவசி அதிகாலையில் குழந்தைகள் கண் முன்பே மனைவியை கட்டையால் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார். சம்பவ இடத்தில் தரையில் ரத்தக்கரை படிந்திருந்தது.

முன்னதாக தாயின் அலறல் சப்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த மகன் சாய் பிரசாத் மற்றும் மகள் கவி நிலா ஆகியோர் எழுந்துள்ளனர். அப்போது தந்தை தவசி, தாயை அடித்ததை பார்த்ததாக சிறுவன் கண்ணீர் மல்க உறவினர்களிடம் கூறியது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது.

கொலை பற்றி தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உடலை மீட்டு திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான தவசியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர் தனது சொந்த ஊரான மன்னார்குடிக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

குழந்தைகள் கண் முன்பு மனைவியை கணவன் அடித்து கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News