செய்திகள்

ராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கப்பிரிவு மனு தாக்கல்

Published On 2019-05-24 19:52 GMT   |   Update On 2019-05-24 19:52 GMT
ராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கப்பிரிவு தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா லண்டனில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாகவும், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இது தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதியன்று ராபர்ட் வதேரா மற்றும் அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. முன்ஜாமீன் காலத்தில் 2 பேரும் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டன.

இந்நிலையில் அவருக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கப்பிரிவு தரப்பில் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



அந்த மனுவில், ராபர்ட் வதேரா தடயங்கள் மற்றும் சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News