செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

டீசல் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

Published On 2021-10-19 08:59 GMT   |   Update On 2021-10-19 08:59 GMT
விலைவாசி உயர்வை தடுக்க டீசல் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

டீசல் தற்போது அன்றாடம் உயர்த்தப்படுவதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது, தி.மு.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ‘பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம்’ என்ற கொள்கை முடிவுதான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

இதன் விளைவாக, சென்னையில் இன்று டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.98.92 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, தேனி, திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலை தொடருமேயானால், தமிழ்நாடு முழுவதும் ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை தாண்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே சொல்லலாம்.

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளான 7.5.2021 அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 93 ரூபாய் 15 காசுக்கும், டீசல் விலை 86 ரூபாய் 65 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 103 ரூபாய் 01 காசுக்கும், டீசல் விலை 98 ரூபாய் 92 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 5 மாதமே கடந்துள்ள நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட பின்னரும், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 ரூபாய் 86 காசாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 12 ரூபாய் 27 காசாகவும் உயர்ந்துள்ளது.

கடந்த 10 நாட்களில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 52 காசாகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 15 காசாகவும் உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றாலும், அன்றாட டீசல் விலை உயர்வு காரணமாக தமிழ்நாடு அரசுக்கு மதிப்பு கூட்டு வரி மூலமாக வருவாய் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை இந்த தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

டீசலினால் ஓடும் வாகனங்கள் மூலம் பொருட்கள் ஆங்காங்கே எடுத்துச் செல்லப்படுவதால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

அனைத்துப் பொருட்களின் விலை என்பது டீசல் விலை உயர்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அன்றாடம் ஏறிக் கொண்டே வரும் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், இதர மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றின் விலையும் வி‌ஷம் போல் உயர்ந்து கொண்டே செல்கிறது.

தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து, அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயல்பாக செயல்பட ஆரம்பித்து இருக்கின்ற நிலையில் தனியார் வாகனங்களில் பயணிக்கும் மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்வோர், சுற்றுலாப் பயணிகள், ஏழை, எளிய, நடுத்தரப் பிரிவினர் என அனைவரும் கூடுதல் சுமைக்கு தினந்தோறும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

இதே போன்று பாசனத்திற்காக டீசல் பம்புசெட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகளும், தொழில் முனைவோர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய நிலையில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை ஓரளவு குறைக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி டீசல் விலையை குறைப்பதுதான்.

எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்ந்து கொண்டே செல்லும் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தும் வகையில் டீசல் மூலம் அன்றாடம் உயர்ந்து கொண்டே செல்லும் மதிப்பு கூட்டு வரி வருவாயினைக் கருத்தில் கொண்டு, டீசல் விலையை மாநில அரசின் சார்பில் ஓரளவு குறைக்கவும், மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தைக் கொடுத்து எண்ணெய் நிறுவனங்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பகுதியையும், மத்திய அரசின் வரியையும் ஓரளவு குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News