உள்ளூர் செய்திகள்
நாட்டறம்பள்ளி பகுதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி திருவிழா
நாட்டறம்பள்ளி பகுதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி திருவிழா நடக்கிறது.
ஜோலார்பேட்டை:
கொரோனா தொற்றால் தமிழக முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில் நாட்டறம்பள்ளி ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று சித்ரை பவுர்ணமி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதல் பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரமும் சிறப்பு பூஜைகள் ஆராதனையும் நடைபெற்றது.
இதனை காண நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று இரவு வாண வேடிக்கையுடன் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.