செய்திகள்
ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அரசுமுறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பாங்காங்:
16வது ஆசியான்-இந்தியா மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் தாய்லாந்து சென்றார். நேற்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் உறவை பலப்படுத்தவதே இந்தியாவின் நோக்கம் என தெரிவித்தார்.
இதையடுத்து இன்று நடைபெற்ற பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் இடையே ஜப்பான் நாட்டு பிரதமர் சின்சோ அபேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இருதரப்பு உறவுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் உடனிருந்தார். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, என பிரதமர் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து வியட்நாம் பிரதமர் நுயேன் ஜுவான் ஃபுக்கையும் மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இம்மாநாட்டில் பங்கேற்க வந்த மியான்மர் நாட்டு ஆளும் கட்சி தலைவர் ஆங் சான் சூகியை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.