செய்திகள்
சிவகாசி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி எம்.ஜி.ஆர். காலனியில் வசித்து வருபவர் குருசாமி. சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகன் வைரமுத்து (வயது 25). இவர் பி.இ. படித்து விட்டு வேலை கிடைக்காமல் தனது தந்தையுடன் அவ்வப்போது சுமை தூக்கும் தொழிலுக்கு சென்று வந்தார். இந்தநிலையில் அவர் வேலைத்தேடி பல இடங்களுக்கும் சென்றும் உரிய வேலை கிடைக்காத விரக்தியில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலாயுதம்ரோட்டில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலை கிடைக்காத விரக்தியில் பட்டாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.