உள்ளூர் செய்திகள்
விஷம் குடித்த பள்ளி ஆசிரியர் சிகிச்சை பலனின்றி சாவு -மனைவி பரபரப்பு புகார்
நெல்லையில் பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அவரிடம் பணம் வாங்கிய சிலர் ஏமாற்றி விட்டதாகவும், அதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
நெல்லை:
பாளை ரஹ்மத் நகர் 60 அடி சாலையை சேர்ந்தவர் சாம்சன் (வயது 56). இவர் மானூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி மேரி விக்டோரியா. இவர் ஸ்ரீவை குண்டம் அருகில் உள்ள மணக்கரை பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சாம்சன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் அதிகாலையில் இறந்தார்.
சாம்சன் தற்கொலைக்கு தொழில் அதிபர்கள் சிலர் தான் காரணம் என அவரது மனைவி குற்றம் சாட்டி உள்ளார். சாம்சன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவை காரணம் காட்டி சாம்சனிடம் வட்டிக்கு வாங்கிய சிலர் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக அவரது மனைவி புகார் கூறி உள்ளார்.
சிலர் மொத்தம் ரூ.3 கோடி வரை சாம்சனிடம் வட்டிக்கு கடன் பெற்றுக்கொண்டு அதற்கான வட்டி தொகையையும், அசல் தொகையையும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சாம்சன் மனைவி மேரி பாளை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.