செய்திகள்
பாபர் மசூதி

பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை -உச்ச நீதிமன்றம்

Published On 2019-11-09 05:39 GMT   |   Update On 2019-11-09 05:39 GMT
அயோத்தில் பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்தது.

இதற்கிடையே நீதிமன்றத்திற்கு வெளியே இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழு அமைக்கப்பட்டது.  அந்த குழு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அந்த குழுவின் சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுபற்றிய தகவல் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வு தினசரி விசாரித்து வந்தது. விசாரணையின் போது சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா தரப்பினர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை வகிக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந் தேதி ஓய்வு பெற இருப்பதால், அதற்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று உத்தரபிரதேச மாநில தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி, டி.ஜி.பி. ஓம்பிரகாஷ் சிங் ஆகியோரை தனது கோர்ட்டு அறைக்கு வரவழைத்தார். அவர்களுடன், உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கேட்டு அறிந்தார். சுமார் ஒரு மணி நேரம் அவர்களுடன் தலைமை நீதிபதி ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனைக்குப் பிறகு, அயோத்தி மேல்முறையீட்டு வழக்கில் அரசியல் சாசன அமர்வு நவம்பர் 9-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அயோத்தியில் மாநில போலீசாருடன் துணை ராணுவ படை வீரர்கள் 4 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் அயோத்தி நிலம் வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் 5 நீதிபதிகளும் கையெழுத்திட்டதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்தார். அவர் கூறியதாவது:-

நீதிமன்றம் நடுநிலையை காக்கும் பொறுப்பில் இருக்கிறது. ஒரு மத நம்பிக்கை பிற மத நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக்கூடாது. மதங்களில் இருக்கும் நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் மதிக்கிறது. மதச்சார்பின்மையே அரசியல் சாசனத்தின் அடிப்படை பண்பு.

அமைதியை காக்கும் வகையிலும் பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும் அயோத்தி தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். 
அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும். நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோகி அகாரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது

இந்த வழக்கில் தொல்லியல் துறையின் அறிக்கையை நிராகரிக்க முடியாது. பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை. மசூதி கட்டப்பட்ட இடத்தில் கட்டுமானம் இருந்ததை தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது. ஆங்கிலேயர் வருகைக்கு முன், சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். இதனை பயணக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

5 நீதிபதிகளும் ஏகமனதாக இந்த தீர்ப்பை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News