ஒத்தக்கடையில் அடகு கடைக்காரரை அரிவாளால் வெட்டிய இளம்பெண்
மேலூர்:
மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை சுதந்திர நகர் 2-வது தெருவில் அடகு கடை வைத்து நடத்துபவர் செந்தில் அதிபன் (வயது 69). நேற்று மதியம் இவரது கடைக்கு ஒரு இளம்பெண் வந்தார்.
அவர்தன்னிடம் இருந்த நகையை அடகு வைப்பதாக கூறினார். அதற்கு செந்தில் அதிபன் நகைக்குரிய பணம் கொடுப்பதாக கூறினார். ஆனால் அந்த இளம்பெண், எனக்கு இந்த பணம் போதாது, ஆனால் கூடுதலாக பணம் வேண்டும் என கூறினார். ஆனால் செந்தில் அதிபன் அவ்வளவு பணம் தர முடியாது என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திடீரென்று அந்த பெண் கடையின் கதவை மூடி செந்தில் அதிபனை கீழே தள்ளி கயிற்றால் கைகளை கட்டி அரிவாளால் வெட்டினார்.
மேலும் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்ய முயன்றார். அப்போது அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று சத்தம் போட்டார்.
அப்போது அவரது கடைக்கு வந்த அவரது மகள் உஷாராணி கதவு பூட்டி இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே இருந்து தந்தையின் சத்தம் கேட்டதால் அவர் பதறியடித்து கொண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அப்போது ஒரு இளம்பெண் அவரை கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. உடனே அவர்கள் அந்த பெண்ணை தப்பி ஓடாமல் இருப்பதற்காக மடக்கி பிடித்தனர்.
மேலும் இது குறித்து ஒத்தக்கடை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு வினோபா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரனை நடத்தினர்.
விசாரணையில் அந்த இளம்பெண் ஒத்தக்கடை அருகே உள்ள புதுப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த சரண்யா (வயது 29) என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.