வழிபாடு
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றபோது எடுத்த படம்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்

Published On 2022-02-21 03:50 GMT   |   Update On 2022-02-21 03:50 GMT
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவ உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமகப்பெருவிழா மிகசிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 13-ந் தேதி விருத்தகிரீஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபசித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சியும், 16-ந் தேதி தேரோட்டமும், 17-ந் தேதி மாசிமக தீர்த்தவாரியும் நடந்தது. மேலும் தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து பஞ்சமூர்த்திகள் கோவிலை சுற்றி வந்தனர். தொடர்ந்து வள்ளி ,தெய்வானை உடனுறை சுபபி்ரமணியர் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து நள்ளிரவில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று கோவிலில் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. இன்று (ஞாயிற் றுக்கிழமை) விடையாற்றி உற்சவம் ஆரம்ப நிகழ்ச்சியும், வருகிற 1-ந்தேதி விடையாற்றி உற்சவம் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்
Tags:    

Similar News