செய்திகள்
பல்லடத்தில் விவசாயி தற்கொலை முயற்சி - வங்கி மீது பரபரப்பு புகார்
செந்தில்குமார் சுல்தான் பேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விசைத்தறிகள் வாங்க கடன் வாங்கியிருந்தார்.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுல்தான்பேட்டை நல்லூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார்(வயது 47). விவசாயி மற்றும் விசைத்தறி உரிமையாளர். இவர் சுல்தான் பேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விசைத்தறிகள் வாங்க கடன் வாங்கி யிருந்தார்.
வங்கி நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் கடன் தொகை ரூ.8 லட்சத்தை செலுத்தியுள்ளார். ஆனால் கடன் தொகை செலுத்திய பின்னரும் வங்கி நிர்வாகம் அடமானம் வைத்த பத்திரங்களை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.
பல முறை கேட்டு பார்த்தும் வங்கி நிர்வாகம் தராததால் விவசாயிகள், விசைத்தறியாளர்கள் ஒன்றிணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி நிர்வாகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் அடமான பத்திரம் திரும்ப கிடைக்காததால் மனவேதனையில் இருந்த செந்தில்குமார் சாணி பவுடரை குடித்து விட்டார்.
உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பல்லடம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வங்கி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கடன் தொகை செலுத்தியும் பத்திரத்தை திரும்ப தர மறுக்கிறார்கள்.
பத்திரம் கிடைக்காததால் மன வேதனை அடைந்த செந்தில்குமார் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.