கர்ப்பிணி பெண் தற்கொலை: கணவர்-மாமியார் கைது
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த தேனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். மணிகண்டனும் செங்கல் பட்டு பகுதியைச் சேர்ந்த பிரியாவும் (25) கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
பிரியா கர்ப்பமாக இருந்தார். இன்று அவருக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்து இருந்தனர். இதற்கிடையே நேற்று காலை அவர் திடீரென வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இறப்பதற்கு முந்தைய நாள் இரவு கணவர் மணிகண்டன், மாமியார் எல்லம்மாள் ஆகியோருடன் பிரியா தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பிரியாவின் நகைகள் அனைத்தும் அடகு வைக்கப்பட்டிருந்ததாகவும், வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் அவற்றை மீட்டு தர பிரியா கேட்டு வந்ததாகவும் தெரிகிறது.
இந்த தகராறில் மனம் உடைந்த பிரியா தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பிரியாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் மணிகண்டன், மாமியார் எல்லம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.