உள்ளூர் செய்திகள்
மணவாளநகர் அருகே விளக்கு கவிழ்ந்ததால் குடிசை எரிந்து முதியவர் பலி
மணவாளநகர் அருகே விளக்கு கவிழ்ந்து குடிசை தீப்பற்றி எரிந்ததில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஜல்லிமேடு, ஏரிக்கரை தெருவில் வசித்து வந்தவர் வேலுசாமி (வயது 65). இவருடைய மனைவி மல்லிகா (60) இவர்கள் தென்னை ஓலைகளால் மேற்கூரை அமைக்கப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வந்தனர். மேலும் வேலுச்சாமி நோய்வாய்ப்பட்டு நடக்கமுடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார். இவர்களது வீட்டில் மின் வசதி இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துள்ளனர்.
அப்போது மல்லிகா பக்கத்து வீட்டுக்கு சென்றிருந்தார். வேலுசாமி மட்டும் வீட்டில் படுத்து இருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கு கீழே விழுந்து தீப்பற்றி எரிந்துள்ளது. மேலும் தீ வேகமாக பரவி குடிசை முழுவதும் எரிந்து நாசமானது. இதில் வேலுசாமி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மல்லிகா மணவாளநகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று் வேலுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.