செய்திகள்
அமெரிக்க கடற்படை பிரிவில் தலைப்பாகை அணிய சீக்கிய அதிகாரிக்கு முதல்முறையாக அனுமதி

அமெரிக்க கடற்படை பிரிவில் தலைப்பாகை அணிய சீக்கிய அதிகாரிக்கு முதல்முறையாக அனுமதி

Published On 2021-09-28 01:58 GMT   |   Update On 2021-09-28 01:58 GMT
அமெரிக்க ராணுவம் மற்றும் விமானப் படையில் தற்போது சுமார் 100 சீக்கியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தாடி வைத்துக்கொள்ளவும், தலைப்பாகை கட்டவும் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் :

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப் பிறந்தவர், சுக்பீர் தூர். 26 வயதாகும் இவர், அமெரிக்க கடற்படையில் லெப்டினன்ட் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர் தமது மத வழக்கப்படி தலைப்பாகை (டர்பன்) அணிய அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரினார். ஆனால் ஆரம்பத்தில் அவர்கள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில் சுக்பீர் தூர் பணியின்போது தலைப்பாகை அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையின் 246 ஆண்டுகால வரலாற்றில், அதன் வழக்கத்தைத் தாண்டி இவ்வாறு தலைப்பாகை அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. அதேநேரம், சீக்கிய அதிகாரி சுக்பீர் தூருக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவர் சாதாரண பணியின்போது தலைப்பாகை அணிந்திருக்கலாம். ஆனால் சண்டை நடக்கும் பகுதியில் பணிபுரியும்போதோ, நிகழ்வுகளின்போதோ தலைப்பாகை அணியக் கூடாது.

தனக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று தமது பிரிவு தலைமைக்கு விண்ணப்பித்துள்ள சுக்பீர், முழுமையான அனுமதி அளிக்கவில்லை என்றால் வழக்குத் தொடருவேன் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க ராணுவம் மற்றும் விமானப் படையில் தற்போது சுமார் 100 சீக்கியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தாடி வைத்துக்கொள்ளவும், தலைப்பாகை கட்டவும் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News