உள்ளூர் செய்திகள்
பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்திக்கு தேவையான நிதியை பிணையமின்றி பெறலாம் - கருத்தரங்கில் தகவல்
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வர்த்தகர்களிடமிருந்து ஆர்டர் பெற்ற உடனேயே ஆடை மதிப்பில் 50 சதவீத நிதி வழங்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு சார்பில் ஏற்றுமதிக்கு முந்தைய நிதி மேலாண்மை குறித்த கருத்தரங்கம் காயத்ரி ஓட்டலில் நடந்தது. கருத்தரங்கை தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, மோகனசுந்தரம் தொடங்கி வைத்தனர்.
இதில் தனியார் நிறுவன வர்த்தக பிரிவு தலைவர் நரஹரி பேசியதாவது:
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வர்த்தகர்களிடமிருந்து ஆர்டர் பெற்ற உடனேயே ஆடை மதிப்பில் 50 சதவீத நிதி வழங்கப்படும்.ஆடை தயாரித்து அனுப்பியபின் 30 சதவீத தொகை வழங்கப்படும். ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்கப்படும் தொகையை நிதி நிறுவனம் வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து பெற்றுக் கொள்ளும். அவ்வாறு வர்த்தகர் முழு தொகையை வழங்கியபின் ஏற்றுமதி நிறுவனத்துக்கு உரிய 20 சதவீத மீத தொகை விடுவிக்கப்படும்.
ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமின்றி, உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கும் பிணையமின்றி நிதி வழங்கப்படுகிறது. போதுமான நிதி விரைந்து கிடைப்பதால் பின்னலாடை நிறுவனங்கள், ஆர்டர் பெறப்பட்ட உடனேயே உற்பத்தியை துவக்கிவிடலாம். இதனால் வீண் காலதாமதம் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.