செய்திகள்
வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான், காஷ்மீர் - மத்திய அரசு மீண்டும் உறுதி

Published On 2021-06-18 00:21 GMT   |   Update On 2021-06-18 00:21 GMT
காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இந்த விவகாரத்தில் எந்த கேள்வியும் யதார்த்தத்தை மாற்ற முடியாது என அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அதை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த நடவடிக்கையை பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த விவகாரத்தை தொடர்ந்து சர்வதேச மட்டத்தில் எடுத்து சென்று வரும் அந்த நாடு தற்போதும் ஐ.நா.வுக்கு இந்த பிரச்சினையை எடுத்து சென்றுள்ளது.

அந்தவகையில் இந்த நடவடிக்கைகளை திரும்ப பெறச்செய்யுமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளார். காஷ்மீரில் போலி வீட்டு சான்றிதழ் உள்ளிட்டவை மூலம் பிராந்திய மக்கள் தொகை அமைப்பையே இந்தியா மாற்றுவதாக அதில் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு நேற்று கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இந்த விவகாரத்தில் எந்த கேள்வியும் யதார்த்தத்தை மாற்ற முடியாது. இதைப்போல எல்லை தாண்டிய பயங்கரவாதமும் ஏற்க முடியாது. அதை நியாயப்படுத்தும் செயலும் ஏற்க முடியாது’ என்று உறுதிபட தெரிவித்தார்.
Tags:    

Similar News