வழிபாடு
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி கண்டருளினர்

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி கண்டருளினர்

Published On 2022-02-18 08:57 GMT   |   Update On 2022-02-18 08:57 GMT
உத்தமர் கோவில் உற்சவர் புருஷேத்தம பெருமாள் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் மாசிமகத்திருவிழா நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலில் இருந்து சுந்தர்ராஜ பெருமாள் புறப்பட்டு உத்தமர்கோவில் மண்டபம் வந்தடைந்தார். இரவு முழுவதும் அங்கு தங்கினார். பின்னர் நேற்று காலை புறப்பட்டு 9 மணிக்கு கொள்ளிடம் ஆற்றிற்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினார்.

பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன. அங்கு இரவு 9 மணிவரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை அன்பில் சென்றடைகிறார்.

இதேபோல, மாசிமகத்தையொட்டி உத்தமர் கோவில் உற்சவர் புருஷேத்தம பெருமாள் கொள்ளிடம் ஆற்றில் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன. அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்த பின் இரவு அங்கிருந்து புறப்பட்டு கோவில் சென்றடைந்தார். தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News