செய்திகள்
தற்கொலை

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2020-11-07 00:43 GMT   |   Update On 2020-11-07 00:43 GMT
புதுச்சேரியை சேர்ந்தவரை காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் கணவன்-மனைவி தகராறில் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை:

சென்னை சூளைமேடு அண்ணாசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (வயது 26). இவர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வினோத் என்பவரை காதலித்து, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, தனது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு, சூளைமேட்டில் கணவருடன் வசித்து வந்தார்.

ஆனால் திருமணம் ஆன விவரத்தை வினோத், அவரது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் காயத்ரி மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு காயத்ரியின் கணவர் வினோத், அவரது பெற்றோரை பார்க்க புதுச்சேரிக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை காயத்ரி, தனது கணவர் வினோத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் மதியம் வினோத், காயத்ரியை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது வெகுநேரமாக காயத்ரி செல்போனை எடுக்காததால், உடனடியாக புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார்.

வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, காயத்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து வந்த சூளைமேடு போலீசார் காயத்ரி உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News