லைஃப்ஸ்டைல்
முதுமை இனிமையாக உடற்பயிற்சி அவசியம்

முதுமை இனிமையாக உடற்பயிற்சி அவசியம்

Published On 2019-08-19 03:58 GMT   |   Update On 2019-08-19 03:58 GMT
முதுமையை மருந்து, மாத்திரை, வைத்திய செலவுகள் இல்லாமல் செய்வது உடற்பயிற்சி மட்டுமே என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.
முதியவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா? என்று கேட்டவுடன் நம்மில் பலரும் செய்யலாம் என்று சொல்வதைக் காட்டிலும். அவர்களால் செய்ய இயலுமா? என்று திருப்பிக்கேட்பர். ஆனால் முதுமையை மருந்து, மாத்திரை, வைத்திய செலவுகள் இல்லாமல் செய்வது உடற்பயிற்சி மட்டுமே என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.

தற்போது 50 வயதை கடந்தவர்கள் முதுமையின் தொடக்க நிலையினர் என்பதை உணர்ந்து, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மனதை இயல்பாக வைத்துக்கொள்வது போன்றவற்றில் ஈடுபடவேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார்கள் முதுமைக்கான வைத்தியம் பார்க்கும் மருத்துவ நிபுணர்கள். பெரும்பாலானவர் இந்த வயதில் ஏதேனும் ஒரு காரணத்தை கூறிவிட்டு படுக்கையில் படுத்தே கிடப்பதையோ அல்லது வீட்டிற்குள் சும்மாவேயிருப்பதையோ தேர்வு செய்கிறார்கள்.

இவர்களுக்கு வாய்ப்பிருந்தும் பல்வேறு சமூக காரணங்களால் உடற் பயிற்சி மற்றும் நடைபயிற்சியை செய்வதில்லை. ஆனால் உடற்பயிற்சி செய்தால் அவர்களின் ஆரோக் கியம் மேம்படும். சிலர் தவிர்க்க முடியாத வைத்திய காரணங்களால் படுக்கையிலேயே காலத்தை கடத்துவர். ஆனால் அவர்களும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வைப் பெற்றால் அதிலிருந்து மீளலாம்.

நடக்க இயலாத நிலையில் இருப்பவர்கள், வேறு உடலியல் சிக்கல் காரணமாக இருப்பவர்கள் தினமும் சிறிது நேரமாவது வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சியை செய்யவேண்டும். இதனால் அவர்களுக்கு ஏற்படும் படுக்கை புண்ணைத் தவிர்க்கலாம். தசைகள் தளர்ச்சியடைவதை தடுக்கலாம். எலும்பின் வலிமை குறைவதை தடுக்கலாம். நெஞ்சில் சளி கட்டுவதை தடுக்கலாம். மலச்சிக்கல் மற்றும் மனச்சோர்வையும் தடுக்க இயலும். உங்களால் முடியும் என்ற மனப்பான்மையுடன் தினந்தோறும் முப்பது நிமிடமாவது உடற்பயிற்சியோ அல்லது நடைபயிற்சியோ மேற்கொண்டால் ஆயுள் முழுவதும் நலம் பயக்கும். வைத்திய செலவு குறையும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவுகள் கொண்டாடும். முதுமை இனிமையாக இருக்கும்.
Tags:    

Similar News