ஆன்மிகம்
பழனி முருகன் கோவில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த காட்சி.

மார்கழி மாதம்: பழனியில் சாமி தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள்

Published On 2019-12-23 06:07 GMT   |   Update On 2019-12-23 06:07 GMT
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்ததால், சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
தற்போது மார்கழி மாதம் என்பதால் பழனி முருகன் கோவிலில் வழக்கத்தைவிட பக்தர்கள் வருகை இருமடங்கு அதிகமாக உள்ளது. அதேபோல் சபரிமலை சீசன் என்பதாலும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று வார விடுமுறையை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.

குறிப்பாக தரிசன வழிகளை தாண்டியும் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டம் காரணமாக சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னரே முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில் நேற்று பகல் முழுவதும் பழனியில் மேக மூட்டம் இருந்ததால் வெயிலில் தாக்கம் அதிகமாக இல்லை. எனினும் வெளிப்பிரகாரத்தில் போடப்பட்டுள்ள கயிற்றால் ஆன விரிப்புகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.
Tags:    

Similar News