செய்திகள்
தமிழ்நாட்டை பிரிக்க நினைக்கும் விஷம குரல்களை அடக்க வேண்டும்- டி.டி.வி.தினகரன்
தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக் குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக் குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம்.
எந்த தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயநலத்திற்காக தமிழர்களை சாதி ரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.
ஏற்கனவே மொழிவாரி மாநில பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை தொடரும் நிலையில் சாதியை முன் வைத்து தமிழ்நாட்டை கூறு போட்டால் அது தமிழினத்துக்கு பெரும் கேடாக முடிந்துவிடும்.
எனவே வெள்ளைக்காரர்களை போல பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளாமல் வளர்ச்சியை பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும்.
தாய்நாட்டின் விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈந்த மன்னர் அழகு முத்துக்கோன் பிறந்த நாளில் அந்த மாவீரனின் தியாகத்தை வணங்குகிறேன்.
உயிரே போனாலும் உடன் இருப்பவர்களை காட்டிக் கொடுத்து துரோகம் இழைக்க மாட்டேன் என்ற உயர் குணத்துடன் பீரங்கி குண்டுகளுக்கு மார்பை காட்டிய அந்த வீரத் தமிழ் மன்னனின் பெருமைகளை எந்நாளும் போற்றிடுவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.