செய்திகள்
எடப்பாடி பழனிசாமி - ராகுல் காந்தி

கொங்கு மண்டலத்தில் ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமி, ராகுல்காந்தி நாளை முகாம்

Published On 2021-01-22 05:20 GMT   |   Update On 2021-01-22 05:20 GMT
கொங்குமண்டலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராகுல்காந்தி ஆகியோர் ஒரே நாளில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார்கள்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. பிரதான கட்சியான அ.தி.மு.க. கடந்த டிசம்பர் மாதமே தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து விட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தமிழகம் முழுவதும் மக்கள் கிராமசபை கூட்டத்தை கூட்டி, மக்களிடையே ஆதரவு திரட்டி வருகிறது.

மாநில கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளும் தமிழகத்தின் பக்கம் தங்கள் பார்வையை திரும்பியுள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் தமிழகம் வந்து அரசியல் பரபரப்பை பற்ற வைத்து சென்று இருக்கிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் ஜல்லிக்கட்டுக்கு வந்து, அரசியல் ஜல்லிக்கட்டுக்கு பிள்ளையார் சுழியிட்டு சென்று இருக்கிறார்.

தேர்தல் நெருங்க, நெருங்க தேசிய தலைவர்களின் இது போன்ற தமிழக வருகை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். 23-ந்தேதி (நாளை) முதல் 25-ந்தேதி வரை 3 நாட்கள் ராகுல்காந்தி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அவரது தமிழக சுற்றுப்பயண விவரத்தை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ளார்.

25-ந்தேதி இரவு 8.45 மணிக்கு தனது தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு ராகுல்காந்தி மதுரை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இதற்கிடையே, ராகுல்காந்தி கோவையில் பிரசாரம் மேற்கொள்ளும் முதல் நாளான 23-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கோவையில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். 23-ந்தேதி (நாளை) காலை 7.05 மணிக்கு கோவை கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

தொடர்ந்து அவினாசி ரோடு மேம்பாலம், மரக்கடை, வேணுகோபால் ரோடு, ராஜவீதி, செல்வபுரம், குனியமுத்தூர் ஆகிய இடங்களி்ல் மக்கள் மத்தியில் பேசுகிறார். சங்கமம் திருமண மண்டபத்தில் இஸ்லாமியர்களுடன் கலந்துரையாடுகிறார்.

23-ந்தேதி ஒரே நாளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ராகுல்காந்தியும் கொங்கு மண்டலத்தில் மக்களை சந்தித்து பேச இருப்பது சட்டசபை தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது.
Tags:    

Similar News