செய்திகள்
புறநகர் வளர்ச்சி குழுமம் மூலம் திருப்பூர் பின்னலாடை துறை புதிய எழுச்சி பெறும் - ஏ.இ.பி.சி. தலைவர் தகவல்
ஏ.இ.பி.சி., கோரிக்கையை ஏற்று தொழில்துறையினருடன் கலந்துரையாடல் நடத்தி தகுந்த ஆலோசனை வழங்கியது புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
திருப்பூர்:
புறநகர் வளர்ச்சி குழுமம் மூலமாக திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதித்துறை புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் அடையும் என, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஏ.இ.பி.சி., கோரிக்கையை ஏற்று தொழில்துறையினருடன் கலந்துரையாடல் நடத்தி தகுந்த ஆலோசனை வழங்கியது புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றும் தங்களின் லட்சியத்துக்கு பக்கபலமாக இருப்போம்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு நகர்ப்புற வளர்ச்சி குழுமம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தமிழக முதல்வருக்கு திருப்பூர் மாவட்டத்தின் மீது உள்ள பற்றுதலை இதன்மூலம் காண முடிகிறது.
புறநகர் வளர்ச்சி குழுமம் மூலமாக திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதித்துறை புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் அடையும்.திருப்பூர் தொழில்துறையினர் புதிய உத்வேகத்துடன் செயல்பட உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.