செய்திகள்
வேலூர் மலைகளில் தூவ 20 ஆயிரம் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி தீவிரம்
வேலூர் மலைகளில் தூவ 20 ஆயிரம் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேலூர்:
வேலூரை பசுமையானதாக உருவாக்க இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் பலர் முயன்று வருகின்றனர்.
வேலூர் நகரை சுற்றி மலைகள் உள்ளது. இந்த மலைகள் மழைக்காலங்களில் பச்சை போர்வை போர்த்தியது போல் பசுமையாக காட்சி அளிக்கும். ஆனால் கோடை காலத்தில் செடி, கொடிகள் கருகி பாறைகளாக காட்சி அளிக்கும். எனவே இந்த மலைகளில் மரங்களை வளர்த்து பசுமையானதாக மாற்ற விதைப்பந்துகள் தூவ தினேஷ்சரவணன் என்ற தன்னார்வலர் முடிவு செய்தார். அதன்படி அலமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள மக்கள் சிலரை அவர் ஒருங்கிணைத்து 20 ஆயிரம் விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
வேலூரை சுற்றி உள்ள மலைகள் அதிகம் உள்ளது. இங்கு அதிகளவில் மரங்கள் இல்லாததால் கோடை காலத்தில் அனல் காற்று அதிகமாக வீசுகிறது. எனவே மலைகளில் மரக்கன்றுகள் வளர விதைப்பந்துகள் தூவப்பட உள்ளது. தயாரிக்கப்படும் 20 ஆயிரம் விதைப்பந்துகளில் வன்னி மரம், பூவரசு மர விதைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு மரங்களும் மழை பொழிவு சூழலை உருவாக்கும். ஆக்சிஜன் காற்றை அதிகம் வெளியிடும். குறைந்த நீரில் வளரும் தன்மை உடையது.
வரும் நாட்களில் அதிக மழை பொழியும் என்பதால் அதை கருத்தில் கொண்டு இவை தயாரிக்கப்படுகிறது. மழை பெய்யும் போது மலைப்பகுதிகளில் விதைப்பந்துகள் தூவப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.