உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மனோதங்கராஜ் பயனாளிக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார்.

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 3350 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வினியோகம்

Published On 2022-01-13 10:00 GMT   |   Update On 2022-01-13 10:00 GMT
குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 3350 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வினியோகிக்கப்பட்டது.
நாகர்கோவில்: 

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு ஏழைப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் நிதி உதவியை வழங்கினார். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 2,380 பட்டதாரி பெண்களுக்கு ரூ.11 கோடியே 90 லட்சம் திருமண நிதியுதவியும், 8 கிராம் தங்கமும், 970 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு 2 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவியும், 8 கிராம் தங்கமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

முதற்கட்டமாக இன்று குறிப்பிட்ட சில பட்டதாரி மற்றும் பட்டதாரி அல்லாதவர்களுக்கு திருமண நிதி மற்றும் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள அனைவருக்கும் விரைவில்  திருமண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் மீது அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 

அந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கும், பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளது. பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கலாக கொண்டாடி வருகிறோம்.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு பரிசுகளையும் வழங்கி உள்ளது. பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, பிரின்ஸ், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, தி.மு.க. மாநகர செயலாளர் மகேஷ், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மஞ்சள் பை வழங்கும் திட்டத்தையும் அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.
Tags:    

Similar News