ஆன்மிகம்
இயேசு

திராட்சைத் தோட்டம் யாருடையது?

Published On 2020-11-09 07:52 GMT   |   Update On 2020-11-09 07:52 GMT
இயேசு கிறிஸ்து உவமைக் கதைகள் வழியாக போதனைகள் செய்வதை கைகொண்டிருந்தார். ஒருமுறை அவர் திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் கதையைக் கூறினார்.
இயேசு கிறிஸ்து உவமைக் கதைகள் வழியாக போதனைகள் செய்வதை கைகொண்டிருந்தார். ஏனெனில் தனது பரலோகத் தந்தையான யகோவா காட்டிய வாழ்க்கை நெறிகளை மீண்டும் கற்பிக்க உவமைக் கதைகளே சிறந்த ஊடகம் என்பதை அறிந்திருந்தார். பலநேரங்களில் அவர் கூறும் உவமைக் கதைகள் எளிமையாக மக்களுக்கு விளங்கின. ஆனால் பல கதைகள் மறைமுகமான அர்த்தம் கொண்டிருந்தன.

ஒருமுறை அவர் திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் கதையைக் கூறினார். இந்தக்கதை பூடகமான அர்த்தத்தைக் கொண்டிருந்தது. ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு நன்றாகவே புரிந்தது. இயேசு சுட்டிக்காட்டிய உண்மையான அர்த்தம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் முன் அந்தக் கதையைக் கேட்போம்.

ஒரு மனிதர் தன்னிடமிருந்த நிலத்தில் ஒரு திராட்சைத் தோட்டத்தை உருவாக்க நினைத்தார். ஏனெனில் அது வளமான மண். நிலத்தை உழுது, பண்படுத்தி உயர்ந்த திராட்சை ரக விதைகளை அதில் வரிசையாக விதைத்து நீர் பாய்ச்சினார். பிறகு தோட் டத்தைச் சுற்றி மதிற்சுவர் அமைத்தார். தோட்டத்தைப் பாதுகாக்க ஒரு காவல் கோபுரத்தை அமைத்தார். அறுவடைக் காலத்தில் திராட்சையைப் பிழிவதற்கு ஓர் ஆலையை அமைத்தார். திராட்சைச் செடிகள் முளைவிட்டு சிரித்தன.

பிறகு தனது தோட்டத்தைக் குத்தகைக்கு கேட்டுவந்த தொழிலாளர்களிடம் மனமகிழ்வுடன் விட்டுவிட்டுத் தூரதேசத்திற்குப் பயணம் புறப்பட்டார். அறுவடைக் காலம் நெருங்கிவந்தது. விளைச்சலில் தன்னுடைய பங்கைப் பெற்றுவர தனது பணியாளர் ஒருவரைக் குத்தகைத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். அவர்களோ அவரைப் பிடித்து, அடித்து, வெறுங்கையோடு திருப்பி அனுப்பினார்கள். அதனால், மீண்டும் இன்னொரு பணியாளரை அவர் அனுப்பினார். அவரையும் அவர்கள் ஓட ஓட விரட்டியடித்தார்கள். பிறகு மூன்றா வதாக ஒருவரை அனுப்பினார், அவரைக் கொன்றே போட்டார்கள். தோட்ட உரிமையாளருக்கு ஓர் அன்பான மகன் இருந்தான்.

“என் மகனுக்கு அவர்கள் நிச்சயம் மதிப்புக் கொடுப்பார்கள்” என்று கூறி, கடைசியாகத் தன் மகனை அனுப்பினார். ஆனால் அந்தத் தோட்டக்காரர்கள், “இவன்தான் இந்தத் தோட்டத்திற்கு வாரிசு. வாருங்கள், நாம் இவ னைத் தீர்த்துக்கட்டிவிடலாம், அதன்பிறகு இவனுடைய இந்தச் சொத்து நமக்கு உரிமையாகிவிடும்” என்று கலந்து பேசி சதித்திட்டம் தீட்டினார்கள்.

அதன்படியே அவனை மதிப்பதுபோல நடித்து அவன் கைகளைப்பிணைத்து அவனைக் கொலை செய்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே அவனது உடலைத் தூக்கிப் போட்டார்கள். இப்படிச் செய்வதால் அவனது உடலைக் கண்டு அனைவரும் அச்சம் கொள்வார்கள் என்று அவர்கள் அந்தக் கொடுஞ்செயலைச் செய்தார்கள். இப்போது, திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து, தன் மகனுடன் நியாயத்தையும் கொன்றுபோட்ட அந்தக் குத்தகைத் தொழிலாளர்களை அழித்துவிட்டு, திராட்சைத் தோட்டத்தை நேர்மையானவர்களிடம் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்” என்று கதையைக் கூறி முடித்தார் இயேசு.

அப்போது, இயேசுவைப் பிடித்து அவரைக் கொலைசெய்ய, உயர்பதவிகளில் இருந்த யூத பரிசேயர்கள் வழிதேட ஆரம்பித்தார்கள். ஏனென்றால், தங்களை மனதில் வைத்தே அவர் இந்த உவமைக் கதையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்து கொண் டார்கள். அந்தக் கதையைச் சொன்னபோது திரளான மக்கள் இயேசு அருகே இருந்ததால் அவரைவிட்டு விட்டு அப்போதைக்கு விலகிப்போனார்கள்.

இந்தக்கதையின் வழியாக இயேசு சொன்னது என்ன? இந்த உலகம் வளம் நிறைந்த திராட்சைத் தோட்டம் போன்றது. தான் படைத்த மனிதர்களிடம் அதைக் குத்தகைக்காக கடவுள் விட்டிருந்தார். இதற்காக நேர்மையாகவும் நீதியாகவும், யாருக்கும் தீங்கிழைக்காமல் இந்தத்தோட்டத்தைப் பராமாரிக்கும்படி மனிதர்களிடம் கேட்டுக்கொண்டார். இதற்காக எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டல்களாக பத்து கட்டளைகளைக் கொடுத்தார். அவற்றைக் கடைபிடிப்பதே தனக்குச் செலுத்தும் குத்தகைப் பங்கு என கடவுள் எதிர்பார்த்தார். ஆனால் மனிதர்களோ கட்டளைகளை மறந்துபோனார்கள்.

தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அதிகாரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஒரு வரை ஒருயொருவர் தீர்ப்பிட்டார்கள். பொறாமையிலும், அடுத்தவர் மண்ணையும் பெண்ணையும் அபகரிக்க ஆரம்பித்தார்கள். சக மனிதரை அடிமைப்படுத்தினார்கள். தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட கொலைபாதகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. மனிதர்கள் திருந்த மறுபடியும் வாய்ப்புத் தரும் விதமாகவே பரலோகத் தந்தை தனது ஒரே மகனை இந்த உலகுக்கு அனுப்பினார். ஆனால் அவரால் தங்கள் அதிகாரத்துக்கு ஆபத்து வரும் என்று பொறாமைப்பட்ட யூத பரிசேயர்கள், அவரைக் கொல்ல தருணம் பார்த்தனர்.

மனம் திருந்தாத அதிகார வர்க்கத்தின் மூலம் தனக்கு நேர இருக்கும் கொடிய மரணத்தை மறைபொருளாகக் குறிப்பிட்டே, திராட்சைத் தோட்ட உரிமையாளரின் கதையைச் சொன்னார் இயேசு.

Tags:    

Similar News