உள்ளூர் செய்திகள்
தொடர் மின்வெட்டால் அவதி: தீப்பந்தம் ஏந்தி நூதன போராட்டம்
கிராம மக்கள் தங்களது பகுதியில் தீப்பந்தம் ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், நெய்வேலி ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தானாகுளம் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சார சப்ளை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த ஊராட்சியில் இரவு-பகல் என முன்னறிவிப்பு இன்றி அடிக்கடி மின்தடை ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள், முதியோர், நோயாளிகள் என பலதரப்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்றிரவு மறுபடியும் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தங்களது பகுதியில் தீப்பந்தம் ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.