உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவில் அருகே இரும்பு கம்பி திருடியவர் கைது
கோபிநாத் வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள புதுப்பை வரதராஜ பெருமாள் கோவில் முன்பு சமுதாய கூடம் கட்டுவதற்கு மூலனூர் அருகே உள்ள சாணார்பாளையத்தை சேர்ந்த கோபிநாத் (வயது 32) என்பவர் ஒப்பந்தம் எடுத்திருந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு அதற்கு தேவையான கம்பி, செங்கல் மற்றும் கட்டுமான பொருட்களை வாங்கி கோவில் அருகில் போட்டிருந்தார். இந்நிலையில் 2019ம் ஆண்டு கொரோனா காலமாக இருந்ததால் போதிய நிதி பெற முடியாததால் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் இருந்தது.
இதனையடுத்து 2 தினங்களுக்கு முன்பு மூலனூர் அருகே உள்ள எரிசனம்பாளையம் சக்திவேல் (53) என்பவர் சமுதாயம் கூடம் அருகே கிடந்த இரும்பு கம்பியை திருடிச்சென்றுள்ளார். இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கோபிநாத் வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.