செய்திகள்
மேலூர் அருகே கார் மோதி வாலிபர் பலி
மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலூர்:
மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 44). இவர் இன்று காலை மேலூர் அருகே உள்ள தெற்கு தெரு கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்குள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஒருவரை சந்தித்த பின் பிற்பகலில் மதுரைக்கு புறப்பட்டார்.
தெற்கு தெருவில் இருந்து 2 கி.மீ. தூரம் சென்று கொண்டிருந்த போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த காரின் டயர் எதிர்பாராத விதமாக வெடித்தது. இதில் தறிகெட்டு ஓடிய கார், குணசேகரன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட குணசேகரன் தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.